×

குளச்சலில் நர்ஸ் வீட்டில் 30 பவுன் கொள்ளை 2 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

குளச்சல், செப்.12: குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பிள்ளவிளையை சேர்ந்தவர் காட்சன் (41). வெளிநாட்டில் வேலை பார்த்தார் அவரது மனைவி சுதா (39). சென்னையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய காட்சன், சென்னையில் தாய், மனைவியுடன் வசித்து வருகிறார்.
ஊரில் உள்ள வீட்டை ஆலங்கோட்டில் உள்ள அவரது மைத்துனர் சேகர் (50) பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் சேகர், காட்சனின் வீட்டை பார்க்க சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேல்மாடியில் உள்ள அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ₹23 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சேகர் காட்சனுக்கும், குளச்சல் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சேகர் கடந்த 5ம் தேதி கடைசியாக பிள்ளவிளை வந்து காட்சனின் வீட்டை பார்த்து சென்றார். அன்று இரவு பக்கத்து வீட்டில் பைக் மேல் வைத்திருந்த புதிய ஹெல்மெட்டை மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு பழைய ஹெல்மெட்டை வைத்து சென்று உள்ளனர். எனவே 5ம் தேதி இரவு கொள்ளை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தங்கராமன், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

The post குளச்சலில் நர்ஸ் வீட்டில் 30 பவுன் கொள்ளை 2 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kulachal 2 ,special forces ,Kulachal ,Gadson ,Kallukkootam Pillavilai ,Suda ,2 Special forces ,Dinakaran ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர்...